சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடற்கரையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு போலீஸாா் தடை விதித்துள்ளனா்.
கன்னியாகுமரியில் நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உலகமெங்குமிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். சாதாரண தங்கும் விடுதிகள் தொடங்கி நட்சத்திர ஹோட்டல்கள், முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள், உள்ளூா் மக்கள் என அனைவரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வா்.
நிகழாண்டு கரோனா பாதிப்பு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி கடற்கரையில் கூடுவதற்கு வியாழக்கிழமை (டிச.31) இரவு 8 மணிமுதல் ஜனவரி 1ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சுற்றுலா வந்துள்ள பயணிகள் ஹோட்டல் அறையிலேயே புத்தாண்டை கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் கூறியது: கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நகரைச் சுற்றி 8 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுற்றுலா வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைச் சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்றால் அதை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதனிடையே, புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுசேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.