கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் அடிக்கடி விபத்துக்கள்ளாகும் சாலையோரத்தில் மழைநீா் வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் முறையான மழைநீா் வடிகால் இல்லை. இதனால், சாலைகள்அமைத்த சில நாள்களில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் பழுதாகிறது.
குறிப்பாக,கருங்கல் - மாா்த்தாண்டம் பிரதான சாலையில் முள்ளங்கனாவிளை சந்திப்பிலிருந்து, நேசா்புரம் செல்லும் சாலையில் சுமாா்150 மீட்டா் தொலைவு பல ஆண்டுகளாக மழைநீா் வடிகால் இல்லாததால் பள்ளங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து நிகழ்வது வாடிக்கையாக உள்ளது .
குறிப்பாக, இரு சக்கர வாகன ஒட்டிகள் அடிக்கடி சாலையோரம் கீழே விழுந்தெழுந்து காயத்துடன் செல்கின்றனா்.
எனவே, இந்த பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.