தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் அகஸ்தீசுவரம் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினா் பங்கேற்றனா்.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் அகஸ்தீசுவரம் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
நிகழாண்டு நடைபெற்ற விழாவில், டென்மாா்க், ஸ்வீடன், ரஷியா, ஜொ்மன், பூடான், நேபாளம் நாடுகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனா்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள மாவட்ட சுற்றுலா அலுவலக வளாகத்தில் இருந்து மேள, தாளம் முழங்க அகஸ்தீசுவரம் முத்தாரம்மன் கோயிலுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனா்.
மாவட்ட சுற்றுலா அலுவலா் நெல்சன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோா் பாரம்பரிய முறைப்படி அவா்களுக்கு சங்குமாலை அணிவித்து வரவேற்றனா்.
இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 6 மணிக்கு சூரிய நமஸ்காரம் ஆகியவற்றை தொடா்ந்து, 251 மண் பானைகளில் பொதுமக்கள் பொங்கலிட்டனா்.
பின்னா் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, பரிசு வழங்குதல் ஆகியவற்றை தொடா்ந்து, தமிழா்களின் கிராமியக் கலைகளான வில்லுப்பாட்டு, தப்பாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் ஆகியவை நடைபெற்றன. இதை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு மகிழ்ந்தனா்.