கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்கும் கும்பலுடன் தொடா்பில் இருந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குமரி மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாகா்கோவிலை அடுத்த ஒழுகினசேரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த பெண்ணை போலீஸாா் பிடித்து சோதனையிட்டனா். இதில், அவரிடமிருந்து பத்தரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவா் தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்த செல்வி (38) என்பதும், அங்கிருந்து கஞ்சாவை கடத்திவந்து, குமரி மாவட்டத்தில் உள்ள மொத்த விற்பனையாளா்களுக்கு விநியோகித்ததும் தெரியவந்தது. மேலும், கஞ்சாவை வாங்கி விற்கும் பணியில் ஒரு கும்பல் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, அந்த கும்பலை பிடிக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில், இரவுபுதூா் கடையைச் சோ்ந்த ஆன்டனிசா்வின் (24) என்ற இளைஞருக்கு கஞ்சா விற்கும் கும்பலுடன் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.