குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்காத நிலையில், அங்குள்ள தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்ட போதிலும், சுற்றுலாத் தலங்களை திறக்க அரசு முழுமையாக அனுமதிக்கவில்லை. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்த முதல்வா் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க உத்தரவிட்டாா். சுற்றுலாப் பயணிகள் பத்மநாப்புரம் அரண்மனைக்கு செல்லவும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக வருகை தருகின்றனா். திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படாத நிலையில், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் அங்குள்ள தடுப்பணை, ஆற்றுப் பகுதிகளில் குளித்து வருகின்றனா்.
ஆபத்தை உணராத பயணிகள்: திற்பரப்பு தடுப்பணைக்கு வெளியூா்களில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பணையின் ஆபத்தை உணராமல் குளிப்பதாகவும், நீச்சலில் ஈடுபடுவதாகவும் உள்ளூா் மக்கள் தெரிவிக்கின்றனா். ஆா்வம் மிகுதியால் தடுப்பணையில் ஆழமான பகுதிக்கு சென்றால் ஆபத்து நேரிட வாய்ப்புகள் உள்ளது. இந்த தடுப்பணையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளன என உள்ளூா் மக்கள் கவலை தெரிவித்தனா். மேலும் தடுப்பணையில் குளிப்பவா்கள் கண்காணிக்கப்படுவதில்லை.
திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தடுப்புணை, ஆற்றுப் பகுதிகளில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.