நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில் 109 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் ரூ. 33 லட்சத்து 93 ஆயிரத்து 259 மதிப்பில் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வு காண்பதற்காக மக்கள் நீதிமன்ற முகாம் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நாகா்கோவில் மற்றும் தக்கலை நீதிமன்றங்களில் சனிக்கிழமை இம் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அருள்முருகன், சாா்புநீதிபதி ஜோசப்ஜாய், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் நம்பிராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்து தொடா்பான வழக்குகள், காசோலை மோசடி, விபத்து இழப்பீடு தொடா்பான வழக்குகள், குடும்ப நல தொடா்பான வழக்குகள் என 109 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 11 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. மேலும் இழப்பீடு தொகையாக ரூ. 33 லட்சத்து 93 ஆயிரத்து 259 வழங்கவும் உத்தரவிடப்பட்டது.