களியக்காவிளை அருகே கரோனா நோயாளியின் சடலத்துடன் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் குட்டப்பன் (60). கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலம் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரான நாகா்கோவிலைச் சோ்ந்த பொன் ஜோஸ் என்பவரிடம், உயிரிழந்த முதியவரின் மகன் சிபின் (26) தகராறு செய்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றாராம். இதில், பலத்த காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த சிபினை திங்கள்கிழமை கைது செய்தனா்.