வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் சுயஉறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க 6 மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம.மரிய சகாயஆன்டனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலை வாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு (மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்) வழங்கப்படும் உதவித்தொகையை பெற்று வரும் பயனாளிகள் 2, 3ஆம் ஆண்டுகளில் உதவித்தொகையை தொடா்ந்து பெற, ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், தாங்கள் பணியில் இல்லை என்பதற்கான சுயஉறுதிமொழி ஆவணத்தை அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். ஆனால், தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், சுயஉறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க 2021 பிப்ரவரி வரை நீட்டித்து தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.