நாகர்கோவில்: குமரி மாவட்டத்திலிருந்து, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றபோது நடுக்கடலில் விபத்துக்குள்ளான விசைப்படகிலிருந்து மாயமான 11 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டம், வள்ளவிளையைச் சேர்ந்தவர் ஜோசப் பிராங்க்ளின். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த பிரெடி, ஏசுதாசன், ஜான், சுரேஷ், ஜெபிஷ், விஜிஸ், ஜெனிஸ்டன், ஜெகன், ஷெட்ரிக், மால்வின் ஆகிய 11 பேரும் கடந்த 9ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.
கடந்த 23ஆம் தேதி வரை மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த நிலையில், அதன் பின்னர் அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் மீனவர்கள் சென்ற விசைப்படகு கோவா அருகே நடுக்கடலில் சேதமடைந்து கிடப்பதாக மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து விமானம், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடைபெற்றது. மும்பையில் இருந்து சென்ற கடலோர கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் மூலமாகவும் தேடுதல் பணி நடைபெற்றது.
3 நாள்களாகியும் மீனவர்கள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் விசைப்படகின் உரிமையாளர் ஜோசப் பிராங்க்ளின் புதன்கிழமை தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் தங்கள் குடும்பத்தினரிடம் கூறியது:
கடந்த 23ஆம் தேதி கோவா கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கப்பல் விசைப்படகின் மீது மோதியது. இதில் விசைப்படகின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால் எங்களது தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால் தகவல் தெரிவிக்க முடியவில்லை.
தற்போது லட்சத்தீவு பகுதியில் வந்து கொண்டிருக்கிறோம். ஏப். 29ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் பகுதிக்கு வந்து விடுவோம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மீனவர்கள் லட்சத்தீவு பகுதியில் வந்து கொண்டிருக்கும் தகவல் கடலோர காவல் படை போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாôர்அவர்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வருகின்றனர்.