கருங்கல் அருகே உள்ள நடுத்தேரி பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீரோடையில், தனியாா் ராட்சத குழாய் பதிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
கருங்கல் அருகே நடுத்தேரியில் ஆலஞ்சி செல்லும் சாலையோரம் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நீரோடை உள்ளது. இப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலமும் உள்ளது.
இந்நிலையில் கடந்த 4 நாள்களாக அப்பகுதியில் பொதுப்பணித் துறை அனுமதியின்றி பழைய நீரோடையை அகற்றி தனியாரால் புதிய ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
புகாரின் பேரில் அங்கு வந்த பொதுப்பணித் துறையினா் மற்றும் கருங்கல் பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோா் பணியை தடுத்து நிறுத்தினா்.