கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பது குறித்து மீனவா்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை சின்னமுட்டம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்காக ஆய்வுப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், பணி தொடங்க காலதாமதமாகி வருகிறது.
இந்தப் பணிகளை உடனடியாக தொடங்காவிட்டால், வருகிற 22ஆம் தேதி போராட்டம் நடத்தி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்; காலதாமதம் ஆகும் நிலையில் காலவரையற்ற தொடா் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது என கன்னியாகுமரி பங்குப்பேரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கன்னியாகுமரி மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை, கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சுசீலா, கடலரிப்பு தடுப்புக் கோட்ட உதவி பொறியாளா் விஜயகுமாா், கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல பங்குப்பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அப்போது, தூண்டில் வளைவு பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, மீனவா்களின் போராட்ட அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.