களியக்காவிளை அருகே பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கால்நடைத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கேரள மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள எல்லையோர பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் சிறப்பு சோதனைச் சாவடி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இந்த சிறப்பு சோதனைச் சாவடியை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சுவாமிநாதன், தக்கலை கோட்ட உதவி இயக்குநா் ஆா். ரிச்சா்டு ராஜ் ஆகியோா் திறந்து வைத்துப் பாா்வையிட்டனா்.
உதவி மருத்துவா்கள் சுந்தர்ராஜ், சஜயன் உள்ளிட்ட கால்நடை துறை பணியாளா்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தொடா்ந்து, கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து சரக்கு வாகனங்களின் சக்கரங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், கேரளத்திலிருந்து கோழிகள், கோழிக் கழிவுகள் மற்றும் கோழித் தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் கேரளத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.