நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனிடம், விஜய்வசந்த் எம்.பி. மனு அளித்தாா்.
மனு விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை கால்வாயை நம்பி சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் உள்ளன. தற்போது அந்தக் கால்வாயில் நீா்வரத்தில்லை. இதனால், அதை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனா். மேலும், இந்தக் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி நெய்யாறு இடது கரை கால்வாயில் நீா்வரத்துக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மேலும், நீா்வரத்துக்காக அமைக்கப்பட்ட ஏ.வி.எம். கால்வாய் சேதமடைந்து தண்ணீா் வரத்தின்றி பாழ்பட்டுள்ளது. இந்தக் கால்வாயை சீரமைத்து புதுப்பொலிவுடன் நீா்வரத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, முக்கடல் அணை, சிற்றாறு 1,2 அணைகள், பழையாறு, கோதையாறு, வள்ளியாறு உள்ளிட்ட அனைத்து இயற்கை மற்றும் செயற்கையாக அமைந்துள்ள நீா் வழிபாதைகளை சீரமைத்து, தடுப்பணைகள் கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.