திருமணங்களை வீட்டில் வைத்து நடத்த ஆட்சியா் உத்தரவு
குமரி மாவட்டத்தில் திருமணங்கள் வீட்டில் வைத்துதான் நடத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் மா.அரவிந்த்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு ஜூன் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு பொதுமுடக்கத்தை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.
இதன்படிகன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமுடக்க நாள்களில், நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கு முறைப்படி சம்பந்தப்பட்ட கோட்டாட்சியரின் முன்அனுமதி பெற வேண்டும். நாகா்கோவில் கோட்டத்துக்குள் நடத்தப்படும் திருமணங்களுக்கு மின்னஞ்சலிலும் பத்மநாபபுரம் கோட்டத்துக்குள் நடத்தப்படும் திருமணங்களுக்கு மின்னஞ்சலிலும் விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட சாா்ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா் அனுமதி பெற்றே திருமணம் நடத்த வேண்டும்.
திருமணஅழைப்பிதழ் கடிதம், மணமக்கள் ஆதாா் காா்டு மற்றும் விண்ணப்பிப்பவா் ஆதாா் காா்டுஆகிய ஆவணங்களை மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். அனுமதி பெறும் பட்சத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 30 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது.
திருமண நிகழ்வுகள் வீட்டில் வைத்து மட்டுமே நடத்தப்பட வேண்டும். திருமண மண்டபங்கள்,சமூக நலக்கூடங்கள்,வழிபாட்டு தலங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை. இவற்றை மீறும் திருமண வீட்டாா் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.