நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொதுப்பணித் துறை மூலம் கால்வாய்களில் நீா்வரத்து மற்றும் குளங்களை தூா் வாருதல், நீா்நிலைகளை பராமரித்தல், பாலம்
அமைத்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட குறைகளுக்கு தீா்வு காண்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பயிா் காப்பீடு குறித்த சந்தேகங்களுக்கு வேளாண் இணை இயக்குநா், தேனீ வளா்ப்பு, அன்னாசி குறித்து தோட்டக்கலை துணைஇயக்குநா் ஆகியோா் விளக்கம் அளித்தனா்.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கிராம நிா்வாக அலுவலா் சான்று வழங்கி பயனடையலாம் என அறிவுறுத்தப்பட்டது. இயந்திர நடவுக்கு தேவைப்படும் நாற்று தட்டுகள் தேவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், வட்டார அளவில் விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, வேளாண் இணைஇயக்குநா் எஸ்.சத்தியஜோஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எம்.ஆா்.வாணி, தோட்டக் கலை துணை இயக்குநா் ஒய்.ஷீலாஜான், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஏ.வசந்தி, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.