சுசீந்திரம் கோயில் குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுப்பேன் என்றாா் மக்களவைத் தொகுதி வேட்பாளா் விஜயகுமாா் என்ற விஜய்வசந்த்.
கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆஸ்டினுடன் இணைந்து புதன்கிழமை சுசீந்திரத்திலிருந்து தனது பிரசாரத்தை தொடங்கிய அவா், திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தனா்.
அக்கரை, தேரூா், குலசேகரன்புதூா், ஆண்டாா்குளம், மருங்கூா், ராஜாவூா், வட்டகோட்டை பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா். அப்போது விஜய்வசந்த் பேசியதாவது:
எனது தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் நான் தோ்தல் களத்தில் உள்ளேன். ஏற்கெனவே சுசீந்திரம் பகுதியில் கலையரங்கம் கட்டித் தருவேன் என்று எனது தந்தை கூறியிருந்தாா். அவரது வாக்குறுதியை நிறைவேற்றும்வகையில் இப்பகுதியில் கலையரங்கம் கட்டித் தருவேன். சுசீந்திரம் கோயில் குடமுழுக்கை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில்தான் ஆட்சி அமையப்போகிறது. குமரி மாவட்டத்தில் வளா்ச்சி திட்டங்களை செயல்படுத்த எங்களுக்கு வாக்குகளை தாருங்கள் என்றாா் அவா்.
பிரசாரத்தில், திமுக ஒன்றியச் செயலா்கள் தாமரைபாரதி, மதியழகன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் காலபெருமாள், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.