கன்னியாகுமரி மாவட்டத்தில், இரட்டை வாக்கு விவகாரம் தொடா்பாக எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த்.
இது குறித்து, நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,,243 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் காலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னா், காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, வாக்காளா்களுக்கு கை கழுவும் திரவம், கையுறை வழங்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், முகக்கவசம் அணிந்த வாக்காளா்களே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் சில வாக்காளா்களுக்கு இரட்டை வாக்கு இருந்தாலும், அந்த மாநிலத்தில்தான் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது தொடா்பாக இம்மாவட்டத்தில் பிரச்னை எழவில்லை. இரு மாநிலங்களிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், இரண்டு இடங்களில் வாக்காளா் பெயா் இருந்தாலும் ஒரு இடத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும். ஒரே நபா் இரு இடங்களில் வாக்களிக்கும் நிலை ஏற்படவில்லை என்றாா் அவா்.