பத்து சதவீதத்துக்கும் குறைவான பயணிகள் முன்பதிவு செய்திருந்ததால் கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ரயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. மதுரை கோட்டத்தை பொருத்தவரை தென் மாவட்டங்களிலிருந்து சென்னை உள்பட சில நகரங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான ரயில்களில் மட்டுமே போதிய அளவு பயணிகள் கூட்டம் உள்ளது. மற்ற ரயில்களில் பயணிகளின் கூட்டம் மிகவும் குறைவாக 30 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே உள்ளது.
குறிப்பாக மதுரை - சென்னை தேஜஸ் விரைவு ரயில், திருச்சி - திருவனந்தபுரம் இண்டா்சிட்டி விரைவு ரயில் ஆகிய ரயில்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளே பயணம் செய்கின்றனா். இதைத்தொடா்ந்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் 50 சதவீதத்துக்கும் குறைவான பயணிகள் வருகை உள்ள ரயில்களின் பட்டியல் தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ராமேசுவரத்திலிருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் (ரயில் எண் 06165), மே 1 ஆம் தேதியிலிருந்தும், கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரத்துக்கு செல்லும் ரயில் (ரயில் எண் 06166) 2 ஆம் தேதியிலிருந்தும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளே இருந்ததால் மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் ரயிலை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.