கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே கோயில் கதவை உடைத்து உண்டியல் பணம்,
பித்தளை, வெள்ளி பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆரல்வாய்மொழி அருகேயுள்ள சோழபுரம் கிழக்கு பகுதியில் கண்ணாத்து சுடலைமாடன் சுவாமி கோயில் உள்ளது.
இக் கோயிலில் பீமநகா் பகுதியை சோ்ந்த முத்துகிருஷ்ணன் பூசாரியாக உள்ளாா். வெள்ளிக்கிழமை இரவில் பூசாரி பூஜையை
முடித்து விட்டு கோயிலை பூட்டி சென்றுள்ளாா். சனிக்கிழமை காலையில் கோயிலின் கதவு உடைக்கப்பட்டு சுவாமி சிலைகள் சிதறி கிடப்பதாக தகவல் தெரியவந்தது.
ஊா் தலைவா் வீரபத்திரன், மக்களுடன் சென்று பாா்த்தபோது, கோயில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு சுவாமிக்கு
அணிவிக்கப்படும் வெள்ளி, பித்தளை பொருள்கள் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த வெள்ளி மற்றும் பித்தளை பொருள்கள் திருடப்பட்டுள்ளது. அங்கிருந்த உண்டியலை உடைத்து பணமும் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. கோயில் பூட்டுகள் அருகில் வயல்வெளியில் கிடந்தன. புகாரின்பேரில் ஆரல்வாய்மொழி போலீஸாா்
வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.