உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழை திங்கள் கிழமை காலை வரை நீடித்ததால் அங்குள்ள முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழைப் பொழிவு வழக்கத்தை விட 90 சதவீதத்திற்கும் மேலாக பெய்து இருப்பதால் பெரும்பான்மையான மாவட்டங்களில் ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கிறது. உத்தமபாளையம் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 மாதங்களாக பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழை திங்கள் கிழமை காலை வரையில் நீடித்தது. இந்த மழைப்பொழிவு காரணமாக சுற்றியுள்ள ஹைவேவிஸ், மேகமலை பகுதிகளிலும் பலத்த மழைப்பொழிவு ஏற்பட்டது.
உத்தமபாளையத்தில் கனமழை காரணமாக அங்குள்ள 2 ஆவது வார்டில் கோவிந்தசாமி கோயில் சுற்றுச்சுவர் சேதமாக சரிந்து கீழே விழுந்தது. சுமார் 20 அடி உயரத்தில் 50 நிளத்தில் கட்டப்பட்ட பழைய கற்களால் கட்டப்பட்ட சுவர் மழைக்கு தாங்காமல் சரிந்து சேதமானது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. விடிய விடிய பெய்த மழையால் உத்தமபாளையம் பழைய வட்டாட்சியர் அலுவகத்திற்குள் மழை புகுந்தது. தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் அலுவலகத்திலிருந்து மழை நீர் வடிந்து வருகிறது.
உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த 2 பெரிய பழைமையான மரங்கள் வேறோடு சாய்ந்தன. அதிஷ்டவசமாக மாணவர்கள் வருகைக்கு முன்பே இரவிலே விழுந்ததால் யாரும் எவ்வித பாதிப்பு இல்லை. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அதோடு, திங்கள் கிழமை காலை வரையில் பெய்த தொடர் மழை காரணமாக ராயப்பன்பட்டி சண்முகா நதி தேக்கம் மற்றும் சுருளி அருவிகளின் வெள்ளப்பெருக்கும் முல்லைப் பெரியாற்றில் இணைகிறது.
அதுபோல , கம்பம், கூடலூர், உத்தமபாளையம் போன்ற பகுதிகளில் பெய்த மழை நீர் சேர்ந்து முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, உத்தமபாளையம் நகரை கடந்து செல்லும் முல்லைப்பெரியாற்றில் சுமார் 3500 கன அடி வெள்ளம் நீர் கரைபுரண்டு வைகை அணையை நோக்கி பெருக்கெடுத்து செல்கிறது. கேம்பை மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து பெரிய அளவிலான பாறை ஒன்று சரிந்து பாதி மலையிலே நிற்பதாக எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சரிந்து விவசாய நிலங்களுக்குள் விழ வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.