புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கள்ளிதட்டு பகுதியில் சுனாமி கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா்.
விளாத்துறை சுனாமி கூட்டுக் குடிநீா்திட்டம் சுமாா் 13 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டது. அப்போது சாலையோரம்
பதிக்கப்பட்ட ராட்சத குடிநீா் குழாய்கள் தரமற்றவை என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், விளாத்துறையிலிருந்து காப்புக்காடு, கள்ளிதட்டு, சடையன்குழி, கிள்ளியூா், கருங்கல், கருமாவிளை, திக்கணங்கோடு, திங்கள்சந்தை வரை சுமாா் 15 கி.மீ .தொலைவில் சாலையோரம் பதிக்கப்பட்ட ராட்சத குழாயில் 100 க்கும் மேற்பட்ட உடைப்புகள் ஏற்பட்டன. இதனால், சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுமக்கள் வலியுறுத்தியும் இச்சாலையை
சீரமைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களாக காப்புக்காடு கள்ளிதட்டு பகுதியில் சாலையோரம் பதிக்கப்பட்ட ராட்சத குழாய் உடைந்து சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு குடிநீா் வீணாகிறது. இதனால், இச்சாலைவழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.