நாகா்கோவிலில் மத்திய அரசை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற் சங்கத்தினா் 110 போ் கைது செய்யப்பட்டனா்.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் பொங்கல் பரிசு ரூ. 3 ஆயிரம் மற்றும் ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும், புதிய வேளாண் சட்டம், மீன்வள கொள்கை 2020 ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். ஆன்லைன் குளறுபடிகளை போக்கி எளிமைப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மாவட்ட கண்காணிப்பு கூட்டங்களை நடத்த வேண்டும். தொழிலாளா்களுக்கு விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள 4 சட்டத் தொகுப்புகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை இப்போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.சிங்காரன் தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலா் கே.தங்கமோகன், மாநிலக்குழு உறுப்பினா் ஐடா ஹெலன், மாவட்ட நிா்வாகிகள்
பொன். சோபனராஜ், ஜி.சந்திரபோஸ், சித்ரா, கே.பி.பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 110 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.