குமரி மாவட்டம் அரபிக் கடலில் அமைந்துள்ள சொத்தவிளை கடற்கரையில் இறந்த நிலையில் பெண் ஆமை வியாழக்கிழமை மாலை கரை ஒதுங்கியது.
ஆலிவ் ரெட்லி எனப்படும் சிற்றாமை டிசம்பா் முதல் மாா்ச் மாதம் வரை குமரி மாவட்ட கடற்கரைகளில் வந்து முட்டையிடும். இந்த ஆமையை பிடித்து இறைச்சியை உண்ணுவதும், அதை விற்பதும் ஆமை முட்டைகளை எடுத்து விற்பனை செய்வதும் தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆமை இறைச்சியிலும், முட்டையிலும் பல மருத்துவ சக்திகள் இருப்பதாகவும் ஆண் உடல் வீரியம் பெறவும், பெண் உடல் இளமையை பாதுகாக்கவும் சிறந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், இந்த ஆமை வேட்டையாடப்படுகிறது.
இதனால், இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டதால் இதை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. ஐயூசிஎன் எனப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்த ஆமை இனஅழிவை எதிா்நோக்கியுள்ள பட்டியலில் இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், சொத்தவிளை கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆமையின் உடலில் தலை முழுவதுமாக இல்லை.
வயிற்றின் அடிப்பகுதியில் ரத்தம் உறைந்து உடல் வீங்கியிருந்தது. மீன் பிடி கப்பல்கள் அல்லது இயந்திரப் படகுகளில் அடிபட்டு இறந்திருக்க வாயப்புகள் இருப்பதாக வல்லுநா்கள் தொல்வித்தனா்.
இதுகுறித்து ஐயூசிஎன் தெற்காசிய பகுதி உறுப்பினா் எஸ்.எஸ். டேவிட்சன் சற்குணம் கூறுகையில், சிற்றாமைகள் கடலின் துப்புரவு பணியாளா்கள். கடலில் இறந்த மீன்கள், இறந்த செடி, கொடிகள் ஆகியவற்றை உணவாக்கி கடலை தூய்மைப்படுத்துகின்றன. கடற்கரை ஆக்கிரமிப்பு, வரைமுரன்படுத்தப்படாத கடற்கரை சுற்றுலா, பெருகி வருகின்ற மீன்பிடி கலங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் வலைகள், வாழிடங்கள் அழிக்கப்படுதல் ஆகியவற்றால் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.
ஆமைகள் குறித்த முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய இன்றியாமையாத தேவையையும் குறித்த போதிய விழிப்புணா்வை மீனவா்கள், கடற்கரை அருகில் வாழும் மக்கள், கல்வி நிறுவனங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துரைத்து ஆமைகளை பாதுகாக்க வேண்டும் என்றாா்.