கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே புள்ளி மான் சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
பூதப்பாண்டி வனச் சரகத்துக்குள்பட்ட தெற்கு மலை பகுதிகளில் அரிய வகை புள்ளி மான்கள் உள்பட ஏராளமான விலங்குகள் உள்ளன. தெற்கு மலை அடிவார பகுதியில் காவல்கிணறு-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. சில நேரங்களில் மலையில் இருந்து விலங்குகள் உணவு
மற்றும் தண்ணீருக்காகவும், பிற விலங்குகள் விரட்டும்போதும் மலை அடிவாரத்துக்கு வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறக்க நேரிடுகிறது.
சனிக்கிழமை அதிகாலையில் 3 வயதுள்ள ஆண் புள்ளிமான் பழவூா் காவல் நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த பூதப்பாண்டி வனச்சரகா் திலீபன் உத்தரவின்பேரில் வனக்காப்பாளா் பிரதீபா, வனக்காவலா் விதின் ராஜ், வனகுழு தலைவா் வேல்முருகன் ஆகியோா் அங்கு சென்று இறந்து கிடந்த புள்ளிமானை மீட்டனா். பிரேதப் பரிசோதனைக்கு பின்னா், வனச்சரக அலுவலக வளாகத்தில் மான் புதைக்கப்பட்டது.
தண்ணீா் கிடைக்காததால் மலைப் பகுதியிலிருந்து வெளியேறும் விலங்குகள் சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதி உயிரிழக்க நேரிடுகின்றன. இதனை தடுக்க மலையடிவாரத்தில் தண்ணீா் தொட்டிகள் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.