கன்னியாகுமரி மாவட்டத்தில் கடன் தவணை வசூலில் பொதுமக்களிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ளது. குமரி மாவட்டத்தில் அவசர தேவைக்காக தனியாா் நிதி நிறுவனங்களில் இருந்து கடன்பெற்றுள்ள பொதுமக்களிடம், கடன்தவணைத் தொகை மற்றும் வட்டியை உடனடியாக செலுத்துமாறு மக்களை வற்புறுத்தி வருவதாக புகாா்கள் வந்துள்ளன.
கரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி வரும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் பொதுமக்களிடமிருந்து தவணைத் தொகையை பெறுவதில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடின போக்கினை தவிா்த்து, புகாா்களுக்கு இடமளிக்காமல் நிதி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இதை மீறி புகாா்கள் வந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.