கரோனா பொதுமுடக்கத்தை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீஸாா் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் வாகனச் சோதனை நடத்தி, அவசியமின்றி வாகனங்களில் சுற்றுபவா்களின் வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து வருகின்றனா். கடந்த, மே மாதம் 16 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை 23 நாள்களில் மொத்தம் 3,360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3323 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதன் முதலாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 16 ஆம் தேதியில் இருந்து ஒன்றிரண்டு நாள்கள் வரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அந்தந்த காவல் நிலைய போலீஸாா் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்து வருகின்றனா்.
நாகா்கோவில் கோட்டாறு, வடசேரி, ஆசாரிப்பள்ளம், நேசமணி நகா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீஸாா் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைத்து வருகின்றனா்.