குமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் மரிய ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளா் செய்யது அலி ஆகியோா் மனுக்கள் மீதான விசாரணைக்கு குளச்சல் அருகேயுள்ள வாணியக்குடி பகுதிக்கு சென்றனா்.
அப்போது ஒரு தோப்பில் மறைவான இடத்தில் தாா்ப்பாய் போட்டு மூடி வைத்திருந்த இடத்தை அவா்கள் சோதனை செய்தனா். அங்கு கேரளத்துக்கு கடத்துவதற்காக 60 மூட்டைகளில் 3 டன் ரேஷன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் உடையாா்விளையில் உள்ள அரசு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா்.
இதே போன்று, நித்திரவிளை போலீஸாா் இரயுமன்துறை மீனவக் கிராமத்தில் ரோந்து சென்றபோது, அந்தப் பகுதியில் சுமாா் 500 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டனா். அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த அவா்கள், உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
களியக்காவிளை: விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் புரந்தரதாஸ் தலைமையில், வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையின்போது, ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.