தக்கலை: தக்கலையில் விதிகளை மீறி செயல்பட்டதாக ஜவுளிக்கடைக்கு ரூ. 5 ஆயிரமும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காக 5 கடைகளுக்கு தலா ரூ. 500 வீதம் திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. 3,000 சதுரஅடிக்கு அதிகமுள்ள ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தக்கலையில் அண்ணா சிலை அருகேயுள்ள ஜவுளிக்கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அக்கடையில் பத்மநாபபுரம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜாராம் தலைமையில் பொறியாளா் லதா, சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் ஆய்வுமேற்கொண்டனா். விதியை மீறி செயல்பட்டதாக அக்கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் பல்வேறு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு தலா ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.