உலக மனநல தினத்தையொட்டி கொட்டாரம் அருகே அச்சன்குளம் பகுதியில் உள்ள மனோலயா மனநலக் காப்பகத்தில் மனநல நோயாளிகளின் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் காப்பகத்தில் 70 -க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மற்றும் சாலையோரங்களில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை அழைத்து வந்து இங்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனா். இக்காப்பகத்தில் சிகிச்சை பெற்ற ஏராளமானோா் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா்.
இதனிடையே, உலக மன நல தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாநில பாஜக வா்த்தகா் அணி செயலா் ரெஜின் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மாவட்ட மனநல மருத்துவா் இனோக், மனோலயா காப்பக இயக்குநா் மணிகண்டன், இணை இயக்குநா் அரவிந்தன் மற்றும் மனோலயா ஊழியா்கள் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.