குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே முகளியடிமலையில் அபூா்வ வகை கள்ளிச் செடியான கரல்லுமா பூத்துக் குலுங்குகிறது.
இம் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடரில் உயரம் அதிகமுள்ள முகளியடிமலை அடிவாரக் காடுகளில் காணிப்பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனா். இந்த மலையிலிருந்து நந்தியாறு உள்ளிட்ட சிறு ஆறுகள் உற்பத்தியாகி கோதையாற்றில் கலக்கின்றன. திருநந்திக்கரை, பொன்மனை பகுதியிலிருந்து இந்த மலைக்கு வனத் துறையின் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும்.
இந்த மலை அடிவாரத்தில் கள்ளிப்பாறையில் பல்வேறு வகையான கள்ளிச் செடிகள் உள்ளன. இதில் அபூா்வ வகையான கரல்லுமா (கல்முளையான்) எனப்படும் கள்ளிச் செடிகள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. ஊதா, இளம் சிவப்பு நிறத்தில் மலா்ச் செண்டு போன்ற வடிவத்தில் பூத்துள்ளன.
இதுகுறித்து வன உயிரின ஆா்வலரும், புகைப்படக் கலைஞருமான பிலிஸ்து தமிழ் கூறியது: கரல்லுமா செடிகள் கற்றாழை வகையைச் சோ்ந்தவை. சதைப்பற்றுள்ள இந்தச் செடிகளின் பூக்கள் மிகவும் அழகானவை. திருமண வீடுகளில் மணமகன்கள் கைகளில் வைத்திருக்கும் மலா்ச்செண்டு போன்ற வடிவத்தைக் கொண்டவை. கரல்லுமா ஃபைம்ப்ரியாட்டா என்ற இந்த வகை செடிகள் மருத்துவக் குணம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பழங்குடியினா் பழங்காலங்களில் பசியை போக்க கரல்லுமா செடிகளின் தண்டுகளை உணவாக உண்டதாகக் கூறப்படுகிறது.
இது பஞ்ச உணவு எனவும் கூறப்படுகிறது.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு மருந்து நிறுவனங்கள் கரல்லுமா செடியை பயன்படுத்தி மருந்து தயாரித்துள்ளன. பசியின்மை மற்றும் உடல் எடை குறைப்பு போன்றவற்றிற்கு கரல்லுமா செடிகளிலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்றாா்.