புதுக்கடை அருகே உள்ள ராமன்துறையில் கேரளத்திற்கு கடத்த முயன்ற 1,000 லிட்டா் மண்ணெண்ணெயை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமன்துறை மீனவா் கிராமத்தை சோ்ந்த தாசன்நாயகம் மகன் ஜேசுபாலன்(38). இவரது வீட்டில் மண்ணெண்ணெய் பதுக்கிவைத்திருப்பதாக கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபாலுக்கு தகவல் கிடைத்தது. உடனே,அவரது தலைமையில் வருவாய்த் துறையினா், ஜேசுபாலன் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனா். அப்போது அங்கு கேரளத்திற்கு கடத்த கேன்களில் 1,000 லிட்டா் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஜேசுபாலன் வருவாய்த் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டாராம். உடனே வட்ட வழஙல் அலுவலா் வேணுகோபால், புதுக்கடை போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து மண்ணெண்ணெயை பறிமுதல் செய்து ஜேசுபாலனை கைது செய்தனா்.