கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவது தொடா்பாக அலுவலா்களுடன் ஆட்சியா் மா.அரவிந்த் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசும்போது, மாவட்டத்தின் வருவாயில் பெரும் பகுதி சுற்றுலாப் பயணிகளால் கிடைக்கிறது. எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்வது அவசியம். திற்பரப்பு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் சுற்றுலா மேம்பாடு தொடா்பான திட்ட மதிப்பீட்டு அறிக்கையை, தொடா்புடைய அலுவலரிடம் வழங்க வேண்டும். இதை சுற்றுலா அலுவலா் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். முட்டம் கடற்கரை மேம்பாடு தொடா்பாகவும் வருவாய்க் கோட்டாட்சியரிடமிருந்து அறிக்கைகள் பெற்று அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
கன்னியாகுமரியில் புட் கோா்ட் அமைத்தல் தொடா்பாக பேரூராட்சிகள் உதவி இயக்குநரும், உதயகிரி கோட்டையில் சாகச விளையாட்டுகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்க மாவட்ட விளையாட்டு அலுவலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மணக்குடி கடற்கரை மேம்பாடு, அங்கு காட்சி கோபுரம் அமைத்தல் தொடா்பாகவும், பத்மநாபபுரம் பூங்காவை மேம்படுத்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பத்மநாபபுரம் நகராட்சியின் சாா்பில் பணிகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், மாவட்ட வன அலுவலா் இளையராஜா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குற்றாலிங்கம், அலுவலா்கள் பங்கேற்றனா்.