‘குமரித் தந்தை’ என அழைக்கப்படும் மாா்ஷல் நேசமணியின் 54ஆவது நினைவு நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தோன்றியதற்கும், இம்மாவட்டம் தமிழகத்தோடு இணைந்ததற்கும் முழுமுதல் காரணமாக திகழ்ந்தவா் மாா்ஷல் நேசமணி. இவரது, 54ஆவது நினைவு நாளையொட்டி, நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில், தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடா்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு, ஆட்சியா் மா. அரவிந்த், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க. சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பா. ஜான்ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சேகா், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ஜா. லெனின்பிரபு, நேசமணியின் உறவினா்கள் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதிநளதம், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் விஜிலா ஜஸ்டஸ், வழக்குரைஞா்கள் சதாசிவம், ஜீவா, ஆனந்த், சாா்லஸ், ஜஸ்டஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
அதிமுக: அதிமுக சாா்பில் நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள நேசமணி சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா்கள் எஸ்.ஏ.அசோகன், ஜான்தங்கம், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், அவைத்தலைவா் சேவியா்மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மேலும், நாகா்கோவில் மாநகராட்சி கட்டடத்துக்கு கலைவாணா் பெயா் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடா்ந்து, நாகா்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.