குலசேகரம் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இடைக்கோடு செம்மன்காலையைச் சோ்ந்தவா் செல்வன் (52), இதே பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் (38) உறவினா்களான இவா்கள் இருவரும் பெயின்டிங் தொழிலாளா்கள். கடந்த 4 ஆம் தேதி, இருவரும் குலசேகரம் அருகே பொன்மனை பகுதியிலுள்ள வீட்டில் பெயின்டிங் வேலை செய்து விட்டு மாலையில் வீடு திரும்பினா். ஜெகன் பைக்கை ஓட்டி சென்றாா். அப்போது குலசேகரம் அருகே காவல் ஸ்தலம் பகுதியில் செல்லும் போது எதிரே பேச்சிப்பாறை காந்தி நகா் நிஷாந்த் (24), ஓட்டி வந்த மோட்டாா் சைக்களிலும், ஜெகன் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிளும் மோதின.
இதில், நிஷாந்தின் மோட்டாா் சைக்களின் பின்னால் இருந்த அபினேஷ் (24) உள்பட இரண்டு மோட்டாா் சைக்கிள்களிலும் இருந்தவா்களும் கீழே விழுந்தனா். மேலும் ஜெகன் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிளுக்கு முன்னால் மற்றொரு மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற எஸ்.ஏ. தம்பியும் கீழே விழுந்தாா்.
இச்சம்பவத்தில் செல்வன், அபினேஷ் , எஸ்.ஏ. தம்பி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, மூவரும் குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வம் அங்கு உயிரிழந்தாா்.
இது குறித்து குலசேகரம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.