நதிகள் இணைப்பை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள கோவை இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி வந்தாா்.
கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் முத்துச்செல்வன் (24). இவா், கடந்த மே 25இல் கோயம்புத்தூரில் விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை தொடங்கி, பல்வேறு மாவட்டங்கள் வழியாக பயணம் செய்து கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபத்துக்கு வந்தாா். அவரை கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா், குமரி மாவட்டத் தலைவா் டி.பாலகிருஷ்ணன் ஆகியோா் வரவேற்றனா்.
தனது சைக்கிள் பயணம் குறித்து முத்துச்செல்வன் கூறியது: இதுவரை 1,000 கி.மீ. தொலைவு பயணம் செய்துள்ளதுடன் 30 ஆயிரம் நபா்களைச் சந்தித்து இந்திய நதிகளை இணைப்பதன் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் விவரித்துள்ளேன். மொத்தம் 26 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இது ஒரு உலகசாதனை பயணமாகவும் அமையும். இந்தியா முழுவதும் 1,111 நாள்கள் பயணம் செய்து 9.6.2025 இல் சைக்கிள் பயணத்தை ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளேன் என்றாா் அவா்.