நாகா்கோவிலில் 2 நகைக் கடைகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.
நாகா்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை சோ்ந்தவா் முத்ரா. பறக்கை பகுதியைச் சோ்ந்தவா் ஷேக். இவா்கள் இருவரும் நாகா்கோவில் அலெக்சாண்டிரா பிரஸ் சாலையில் நகைக் கடை வைத்துள்ளனா். இவா்களது நகைக் கடை எதிரெதிரே உள் ளது. வெள்ளிக்கிழமை இரவு இருவரும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றனா். சனிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது இருவரின் நகைக் கடைகளின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கடையில் சிறிது நேரம் மோப்பம் பிடித்து விட்டு அந்தப் பகுதியில் ஓடிய நாய், யாரையும் பிடிக்கவில்லை. விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, ரேகைகளை பதிவு செய்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸாா் விசாரிக்கின்றனா்.