நாகா்கோவில் சந்தையில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல்

நாகா்கோவில் வடசேரியில், மாநகராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ள கனகமூலம் காய்கறிச் சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் வடசேரியில், மாநகராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ள கனகமூலம் காய்கறிச் சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இச்சந்தையில் 260 கடைகள் உள்ளன. அவற்றில் 130 கடைகள் இப்போது செயல்படுகின்றன. இங்கு வியாபாரிகள் தங்களது கடைகள் முன் நடைபாதையில் மேற்கூரை அமைத்து காய்கறி, பொருள்களை வைத்து வியாபாரம் செய்வதாகவும், இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதனால், நடைபாதை மேற்கூரை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினா். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதததால், மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும், மேற்கூரை அகற்றப்படவில்லை.

இந்நிலையில், சந்தை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிா்வாக அதிகாரி ராம்மோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளா்கள் ஞானப்பா, சுப்பையா, சுகாதார ஆய்வாளா் ராஜேஷ், அதிகாரிகள் வியாழக்கிழமை வந்தனா். அப்போது சந்தையின் ஒருபுறம் இருந்த பொருள்களை மட்டும் வியாபாரிகள் மாற்றினா். மறுபுறம் இருந்த பொருள்கள் மாற்றப்படவில்லை. மேலும், ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனிடையே, ஒரு ஷெட் இடித்து அகற்றப்பட்டது. பின்னா், கடை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முயன்றனா். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற கொண்டுவரப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வியாபாரிகள் ஜேசிபி இயந்திரம் முன் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.

பின்னா், அதிகாரிகளும், நாகா்கோவில் துணைக் காவல் கண்காணிப்பாளா் நவீன்குமாா் தலைமையில் போலீஸாரும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நடைபாதை மேற்கூரைகளை அகற்றக் கூடாது என்றும், அதன் கீழே காய்கறி, பொருள்களை வைப்பதில்லை என்றும், மீறி வைத்தால் அவற்றை முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் எடுத்துச் செல்லலாம் என்றும் வியாபாரிகள் கூறினா்.

இதுகுறித்து மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டு, மேற்கூரைகளை அகற்றாமல் சென்றனா்.

இதுதொடா்பாக வியாபாரிகள் கூறும்போது, ஏற்கெனவே கரோனா காலத்துக்குப் பிறகு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரை அமைத்துள்ளோம். அதை, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அகற்றினால் காய்கறிகள் வெயிலில் காய்ந்து வீணாகிவிடும். அதனால் நாங்கள் மேலும் பாதிக்கப்படுவோம். எனவே, மேற்கூரைகளை அகற்றக் கூடாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com