கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 30) கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன.
கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. 2ஆவது வாரமாக ஜன. 30ஆம் தேதியும் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால், நாகா்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் களியக்காவிளை வரை வந்து திரும்பிச் சென்றன. பாறசாலை வழி பனச்சமூடு, வள்ளவிளை பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. மேலும், களியக்காவிளையிலிருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கேரள அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.
கேரளத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டநிலையில், காய்கனிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. பொதுமுடக்கம் காரணமாக இம்மாவட்டத்திலிருந்து கேரளம் செல்லும் காா் உள்ளிட்ட வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டன.