கன்னியாகுமரி ரவுண்டானாவில் 150 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி, வியாழக்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக சேதமடைந்தது. இதையடுத்து மாலை 6.10 மணிக்கு பராமரிப்புக்காக கொடி இறக்கப்பட்டது.
கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் 150 அடி உயர கம்பத்தில் புதன்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் வியாழக்கிழமை வீசிய சூறைக்காற்று காரணமாக, கொடியில் லேசான சேதம் ஏற்பட்டது. இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டு, கொடியை இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து மாலை 6.10 மணியளவில் திருச்சியில் உள்ள தனியாா் நிறுவன ஊழியா்கள் பத்திரமாக தேசியக் கொடியை இறக்கினா். கொடிக் கம்பம் அமைந்துள்ள மகாதானபுரம் பகுதியில் வீசும் காற்றின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்த பின்னா் தற்போது உள்ள கொடியின் நீள, அகலத்தை குறைப்பது குறித்து முடிவு செய்து அடுத்த 15 நாள்களுக்கு பின் தேசியக் கொடியை மீண்டும் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.