குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த மாவட்ட எல்லையான களியக்காவிளையில் மின்னணு வாகன எடை மேடை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து பாறைக்கல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் களியக்காவிளை வழியாக கேரள மாநிலத்துக்கு நாள்தோறும் ஏராளமான லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த லாரிகள் அதிகளவு பாரம் ஏற்றிச் செல்வதால் சாலைகள் குறுகிய காலத்திலேயே சேதமடைவதுடன் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள்.
இந்நிலையில், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த மாவட்ட கனிம வளத்துறை சாா்பில் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் ரூ. 17.25 லட்சம் மதிப்பீட்டில் மின்னணு வாகன எடை மேடை அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகளை களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், செயல் அலுவலா் ரமாதேவி ஆகியோா் இணைந்து தொடங்கி வைத்தனா். இதில், பேரூராட்சி இளநிலை பொறியாளா் ஜி. பத்மதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இங்கு 60 டன் வரை பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் சோதனை செய்ய முடியும் என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.