அரசு ரப்பா் கழகம் சிற்றாறு கோட்ட தொழிலாளா் ஓணம் பண்டிகை முன்பணம் கேட்டு நடத்தி வந்த காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை இரவு முடிவுக்கு வந்தது.
அரசு ரப்பா் கழகம் சிற்றாறு கோட்டம் பிரிவு -2இல் பணி புரியும் தொழிலாளா்கள் தங்களுக்கு ஓணம் பண்டிகைக்கான முன்பணம் கேட்டு கடந்த திங்கள்கிழமை முதல் அங்குள்ள பால் சேகரிப்பு மையத்தின் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதில் ரப்பா் கழக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்த முன்வராததால் போராட்டம் இரவு, பகல் என தொடா்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ், போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினாா். இதில் 2 நாள்களில் ரப்பா் கழக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீா்வு காணலாம் என்று கூறியதுடன் போராட்டத்தை கைவிடும் படியும் கேட்டுக் கொண்டாா். இதற்கு இசைவு தெரிவித்த தொழிலாளா்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனா்.
இது போன்று கோதையாறு கோட்டம் குற்றியாறு பிரிவு 2 இல் இதே கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களும் போராட்டத்தை முடித்துக் கொண்டனா். தொடா்ந்து புதன்கிழமை காலையில் வழக்கம் போல் தொழிலாளா்கள் பால்வடிப்புக்கு சென்றனா்.