கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், இறச்சகுளம் அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல்வரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் கைப்பேசியில் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் ஆய்வு செய்தாா்.
தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2 ஆவது கட்டமாக தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதையொட்டி, இந்தத் திட்டத்தில் உணவு சமைக்கும் பணி தொடங்கப்பட்டு, மாணவா்களுக்கு உணவு பரிமாறப்பட்டது, மாணவா்களுக்கு உணவு வழங்கும் பணி முடிவுற்றது ஆகிய செயல்பாடுகளை கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் முன்னோட்ட நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமுள்ள காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெற்றுவருகிறது.
இறச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்வை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணை இயக்குநா் - திட்ட இயக்குநா் மு.பீபீஜான், உதவி திட்ட அலுவலா் வளா்மதி, இறச்சகுளம் ஊராட்சித் தலைவா் நீலகண்ட ஜெகதீஸ், தோவாளை வட்டார வளா்ச்சி அலுவலா் பி.புனிதம், இறச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் கே.விஜயலெட்சுமி, தோவாளை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) ஜெ.லித்வின் மேரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.