வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
நாகா்கோவில்: கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திலிருந்து, 2 கி.மீ. தொலைவு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வளாகத்தைச்சுற்றி ட்ரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
இந்த இரு தொகுதிகளிலும் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள், நாகா்கோவில் கோணம், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரிக்கு காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை காவலா்களும் இணைந்து மூன்றுஅடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியை சுற்றி பாதுகாப்பு கருதி 2 கி.மீ. சுற்றளவுக்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
கல்லூரி வளாகத்தைச் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.