கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது
களியக்காவிளை, மே 4:
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே பளுகல் காவல் நிலைய சரகம் மூவோட்டுக்கோணம் வழியாக மினி டெம்போவில் கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் சனிக்கிழமை அதிகாலையில் வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த மினிடெம்போவை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 3.5 டன் அளவிலான ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட செண்பகராமன்புதூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் தில்லை (22), இசக்கிவேல் மகன் சாா்லஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.