குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு பைக்குகள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு பைக்குகள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்; நீட் தோ்வு எழுதிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மாணவி உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா்.

கோதையாறு மின்வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த ஹரிபாலன் மகள் அனுகிரகா (18). இவா் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி பால்குளம் பகுதியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் நீட் தோ்வு எழுதிவிட்டு பைக்கில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். அதன்பின்னால், அவருக்கு துணையாகச் சென்ற காட்டாக்கடை பகுதியைச் சோ்ந்த ஜான்சி (17) அமா்ந்திருந்தாா்.

குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியில் இந்த வாகனமும், பொன்மனை புல்லத்தூா் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ரமேஷ் (48) ஓட்டிசென்ற பைக்கும் மோதினவாம். இதில், 3 பேரும் காயமடைந்தனா்.

அனுகிரகா, ஜான்சி ஆகியோா் குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரமேஷ் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து அனுகிரகா கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com