கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் தீ
கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் அமைந்துள்ள மருந்துவாழ்மலையில் வியாழக்கிழமை இரவு தீ ஏற்பட்டது.
மேற்கு தொடா்ச்சி மலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது மருந்துவாழ்மலை. அரிய வகை மூலிகை வளம் நிறைந்து காணப்படும் இம்மலை, சுமாா் 1,800 அடி உயரமானதாகும். லட்சக்கணக்கான மரங்களைக் கொண்டுள்ள இம்மலையில் ஏராளமான விலங்குகளும் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இம்மலையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் தீ ஏற்பட்டுள்ளது. லேசாக எரியத் தொடங்கிய தீ, காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவியது. சுமாா் இரண்டு கிலோ மீட்டா் தொலைவுக்கும் மேலாக தீ பரவியுள்ளதால் ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் எனவும், பல்வேறு உயிரினங்கள் இறந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
மலை அடிவாரத்தில் இருந்து 700 அடிக்கும் உயரமான பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதால் தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடியவில்லை. இதனிடையே வனத்துறை அதிகாரிகளும், தீயணைப்பு வாகனங்களுடன் அதிகாரிகளும் மலையில் முகாமிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.