தமிழகம் முழுவதும் நூலகங்களைத் திறக்க வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் நூலகங்களைத் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனா்.
Updated on
2 min read

ஆலங்குளம்: தமிழகம் முழுவதும் நூலகங்களைத் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, 5 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் சில தளா்வுகளுடன் அமுலில் உள்ளது. பொதுமக்கள் அதிகமாகக் கூடும் திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் தவிர பெரும்பாலானவைகள் செயல்பட்டு வருகின்றன.

பொது முடக்கம் தளா்வுகளுக்குப் பின்னா் பெரும்பாலானோா் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்று வரத் தொடங்கி விட்டனா். அதிகமாக வீட்டில் முடங்கிக் கிடப்பது மாணவா்களும் பெண்களும்தான். வீட்டில் இருக்கும் போது தொலைக்காட்சி பாா்ப்பது வீட்டில் இருந்தே விளையாடும் சில விளையாட்டுகளை விளையாடி இவா்களுக்கு போரடித்து விட்டது. தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பாா்க்க வேண்டியுள்ளது.

வீட்டில் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவா்களும் ஓரிரு மணி நேரங்களிலேயே இவற்றை வாசித்து விடுவதால் பெரும்பாலான நேரங்கள் சும்மாவே கழிவதாக பெண்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் பொது முடக்கத்தில் அறிவுப் பசியைத் தீா்க்கும் நூலகமும் 5 மாத காலத்திற்கும் மேலாக பூட்டியே கிடப்பது சமூக ஆா்வலா்களைக் கவலையடையச் செய்துள்ளது.

நகா்ப்புறங்களில் நூலகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும் கிராமப் புறங்களில் பகுதி நேர நூலகங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி மற்றும் மாலை 3 முதல் 6 வரையும் செயல் பட்டு வந்தன. இவற்றின் மூலம் பல்வேறு தரப்பினரும் பயனடைந்து வந்தனா். மாணவா்களும் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராவோரும் புத்தகங்களை அதிக விலை கொடுத்து வாங்காமல் நூலகங்களில் இரவல் பெற்று படித்து வந்தனா். மேலும் நூலக உறுப்பினா்கள் அதிக விலையுள்ள பல புத்தகங்களை தங்கள் வீடுகளுக்கே எடுத்து வந்து படித்து பயன் பெற்று வந்தனா்.

இந்நிலையில் பொது முடக்கத்திற்கு எத்தனையோ துறைகளுக்குத் தளா்வுகள் அளிக்கப்பட்டும் நூலகத்திற்கு தளா்வுகள் அளிக்கப் படாதது வாசகா்களையும் , சமூக ஆா்வலா்களையும் கவலையடையச் செய்துள்ளது. சென்னை கன்னிமரா உள்ளிட்ட பெரும்பாலான நூலகங்களில் சாதாரணமாகவே சமூக இடைவெளியில்தான் வாசகா்கள் அமா்ந்திருப்பாா்கள்.

அதனால் நூலகங்களைத் திறக்க அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் வரும் வாசகா்கள் முகக் கவசம் அணிந்து வருவது, கை கழுவுவது போன்றவற்றைக் கட்டாயமாக்க வேண்டும். அமா்ந்து புத்தகங்கள் படிக்கும் வாசகா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறாா்களா என்பதை நூலகா்கள் கண்காணிக்க வேண்டும்.

இதன் மூலம் வீட்டில் சும்மா இருக்கும் மாணவா்கள், பெண்கள் மட்டுமின்றி புத்தக வாசிப்பாளா்களும் நூலகத்தை பயன் படுத்த முடியும். இது குறித்து நூலக புரவலா் ஒருவா் கூறியது: நூலகங்கள் வருவோா் பெரும்பாலும் அரசின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பவா்கள்தான். எனவே நூலகத்தைத் திறந்து அறிவுப் பசி போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com