தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டத்தில் பள்ளியைத் திறக்க வலியுறுத்தினர்.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் படிப்படியாகத் தளர்வு செய்யப்படும் நிலையில் நவ.16இல் பள்ளிகளைத் திறக்க அரசு அறிவித்தது. இதற்கு பல தரப்பிலும் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பள்ளிகளில் மாணர்வர்களின் பெற்றோருடன் பள்ளி நிர்வாகத்தினர் கலந்துரையாட அரசு அறிவுறுத்தியது. அதன்படி இன்று அனைத்துப் பள்ளிகளிலும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பள்ளி செயலர் சுந்தரம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வெங்கடசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வெப்ப சோதனை செய்யப்பட்டும் கிருமி நாசினி கொண்டும் தண்ணீர் கொண்டும் சுத்தம் செய்த பின் அனுமதிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர் பள்ளியைத் திறக்க வலியுறுத்தினர். நீண்ட நாள்கள் பள்ளி செல்லாமல் இருப்பதால் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். மேலும் பள்ளி வரும் மாணவர்களுக்கு அரசும், பள்ளி நிர்வாகமும் முழுப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறினர்.
மேலும் கூட்டத்தில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.