பாவூர்சத்திரம் அருகே மரத்தில் கார் மோதி 2 மருத்துவர்கள் பலி
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் ராம்குமார் (40). மருத்துவரான இவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவரும், குருவிகுளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் சிதம்பரராஜா (45), சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மருத்துவர் முத்துகணேஷ் (29), சங்கரன்கோவிலைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி கார்த்திக்குமார்(32) ஆகியோர் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவர்கள் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, மாலையில் கடையம் நோக்கி ஒரு காரில் சென்றுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மருத்துவர் சிதம்பர ராஜா.
திரவியநகர் அருகில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாம். இதில் காரை ஓட்டிய மருத்துவர் ராம்குமார், மற்றும் சிதம்பரராஜா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவரும் பலத்த காயத்துடன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.