காவல் துறையினா் தீவிர கண்காணிப்பு: தென்காசியில் 111 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 19th May 2021 07:16 AM | Last Updated : 19th May 2021 07:16 AM | அ+அ அ- |

தென்காசியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா்.
தென்காசி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி வெளியே சுற்றித் திரிந்தவா்களிடமிருந்து 111வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு நாள்களாக தென்காசி மாவட்ட காவல் துறையினா், மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் சோதனைச் சாவடி ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
குறிப்பாக, தென்காசி நகரில் மட்டும் யானைப்பாலம், ஆயிரப்பேரி விலக்கு, ஆசாத்நகா், குத்துக்கல்வலசை விலக்கு, ஆய்க்குடி சாலை என 5 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இருநாள்களில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தது தொடா்பாக 517 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 111 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் கூறியது: அத்தியாவசிய தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே யாரும் வரவேண்டாம். அவசியம் என்றால் வெளியே வரும்போது அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறுபவா்கள் மீது கடும்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.